கோலாலம்பூர்: எதிர்க்கட்சி வசமுள்ள தொகுதியை கைப்பற்றும் முயற்சியாக அன்வார் இப்ராகிம் சனிக்கிழமை கெடா மாநிலத்தில் சூறாவளிப் பிரசாரம் மேற்கொண்டார்.
ஏழைகளுக்கு உதவுவதாக அவர் வாக்குறுதியளித்தார்.
கெடாவின் தற்காலிக முதல்வரான சனுசி முஹமட் நோரின் தொகுதியில் உள்ள விவசாயிகளை ஈர்ப்பது அன்வாரின் முக்கிய குறிக்கோளாக இருந்தது. ஃபெல்டா டெலோய் டிமுர் குடியேற்றப் பகுதிக்கு வருகையளித்த அவரை 3,000க்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்தி வரவேற்றனர். திரு சனுசி, தான் போட்டியிடும் ஜெனரி தொகுதியைத் தக்கவைத்துக் கொள்ளப் போராடி வருகிறார்.
திரு அன்வாரின் ஐக்கிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள தேசிய முன்னணி அங்கு போட்டியிடுகிறது.
இதனால் தேசிய முன்னணிக்கு ஆதரவாக ஃபெல்டாவில் அன்வார் பிரசாரம் செய்தார். இதற்கிடையே கிராமப் பகுதிக்கு அன்வார் ஹெலிகாப்டரில் வந்து இறங்கியதை சனுசி கிண்டலடித்துள்ளார்.
வானத்தைப் பார்த்து வாயைத் திறந்ததுபோல தன்னைப் புகைப்படம் எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ள சனுசி, நோன்புப் பெருநாளைக் கொண்டாட ஹெலிகாப்டர் வருதா? என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஏறக்குறைய 6,000 பேர் விருப்பக் குறியீடு அளித்துள்ளனர்.
ஃபெல்டாவில் மாற்றத்தைக் கொண்டு வரப்போவதாகக் கூறிய அன்வார், கடந்த ஜூன் மாதம் ஃபெல்டா குடியிருப்பாளர்களின் கடன்களை ரத்து செய்வதற்காக 8.3 பில்லியன் ரிங்கிட் (S$2.4 பில்லியன்) நிதி ஒதுக்கப்பட்டதை சுட்டினார்.

