988,680 பயணிகளை ஈர்த்த சாபா

988,680 பயணிகளை ஈர்த்த சாபா

1 mins read
8fc2a06c-9b0c-414a-a04a-5463283c01b1
மலேசியாவின் சாபா மாநிலம் இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் கிட்டதட்ட ஒரு மில்லியன் பயணிகளை ஈர்த்துள்ளது. - படம்: மலாய் மெயில்

சண்டகான்: மலேசியாவின் சாபா மாநிலத்திற்கு இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மொத்தம் 988,680 பயணிகள் சென்றனர்.

அவர்களில் உள்ளூர் பயணிகளும் அனைத்துலகப் பயணிகளும் அடங்குவர்.

சென்ற ஆண்டில் இதே காலத்தில் அங்கு சென்ற பயணிகளின் எண்ணிக்கை 558,169தான். இந்த ஆண்டு பயணிகள் அளவு 77.1% அதிகரித்துள்ளது.

சாபா முதல்வர் ஹாஜி நூர் இந்த விவரங்களைத் தெரிவித்தார். சாபா சுற்றுலாத்துறை இந்த ஆண்டிலும் வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து வளரும் என்பதையே இது புலப்படுத்துவதாக அவர் கூறினார்.

மாநில அரசாங்கம் பல்வேறு செயல்திட்டங்கள் மூலம் இந்த ஆண்டில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும், புதிய பொலிவை அளிக்கும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

மலேசியா எல்லைகளைத் திறந்து விட்டதை அடுத்து சாபா மாநில சுற்றலாத்துறை மீட்சி அடைய ஊக்கம் கிடைத்ததாகவும் முதல்வர் தெரிவித்தார்.

சாபாவுக்கு வருகை அளித்த பயணிகள் 988,680 பேரில், 282,450 பேர் அனைத்துலக பயணிகள். 706,230 பேர் உள்ளூர் பயணிகள்.

இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரைப்பட்ட காலகட்டத்தில் பயணிகளால் சுற்றுலாத் துறைக்கு 2.02 பில்லியன் ரிங்கிட் வருவாய் கிடைத்து உள்ளது என்றும் முதல்வர் கூறினார்.

சண்டகான் விழா-2023 என்ற நிகழ்ச்சியை சனிக்கிழமை இரவு தொடங்கி வைத்து முதல்வர் பேசினார்.

குறிப்புச் சொற்கள்