சோல்: உலக சாரணர் ஒன்றுகூடலைத் தொடர்ந்து நடத்த தென்கொரியா உறுதியாக உள்ளதாக அதிகாரிகள் திங்கட்கிழமை தெரிவித்தனர்.
சாரணர் முகாமிட்டுள்ள பகுதியில் கடும் புயல் வீசும் என எதிர்பார்க்கப்படுவதால் ஆயிரக்கணக்கான பங்கேற்பாளர்களை வெளியேற்ற ஏற்பாட்டாளர்கள் திட்டமிட்டுள்ள வேளையில் அதிகாரிகள் இவ்வாறு கூறியுள்ளனர்.
பல ஆண்டுகளாகக் காணப்படாத மிக மோசமான வெப்ப அலையால் தென்கொரியா பாதிக்கப்பட்டுள்ள வேளையில், சாரணர் ஒன்றுகூடலை ஏற்பாடு செய்தவர்களுக்கு இப்போது புயல் மற்றொரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
கடும் வெப்பத்தால் நூற்றுக்கணக்கான சாரணர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். சாரணரின் பெற்றோர் புகார் அளித்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ், அமெரிக்க சாரணர் படையினர் இந்த ஒன்றுகூடலில் இருந்து வெளியேறிவிட்டனர்.
சாரணர் ஒன்றுகூடலை நார்த் ஜியோலா மாநிலம் ஏற்று நடத்தும் வேளையில், அதன் ஆளுநர் மன்னிப்பு கேட்டுக்கொண்டுள்ளார். பங்கேற்பாளர்கள் இருக்கும் முகாம்களுக்கு தண்ணீர் வாகனங்களையும் குளிர்சாதனப் பெட்டிகளையும் அதிகாரிகள் அனுப்பிவைத்துள்ளனர்.

