சிட்னி: சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலிய செய்தியாளர் செங் லெய்யை சீனா விடுவிக்குமாறு ஆஸ்திரேலியப் பிரதமர் ஆண்டனி ஆல்பனிஸ் அறைகூவல் விடுத்துள்ளார்.
மூன்று ஆண்டுகளாக சிறைவாசம் இருக்கும் செங்கின் நலன் குறித்து தாம் கவலை கொள்வதாக திரு ஆல்பனிஸ் சனிக்கிழமை குறிப்பிட்டார்.
சிறையில் இருந்தவாறு ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் பேசிய செங், மரங்களையும் சூரிய வெளிச்சத்தையும் அவற்றைவிட முக்கியமாக தம் பிள்ளைகளைக் காண மனம் ஏங்குவதாகக் கூறியுள்ளார்.
செங் சொன்ன இச்செய்தியை அவரின் துணைவியார் நிக் கோய்ல், ஆஸ்திரேலிய செய்தித் தளங்களிலும் சமூக ஊடகங்களிலும் வியாழக்கிழமை பகிர்ந்தார்.
சீன அரசாங்க ஒளிபரப்பு நிறுவனமான சிஜிடிஎன்னின் முன்னாள் தொகுப்பாளரான செங், 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார். ஆனால், 2021 பிப்ரவரியில்தான் அவர் முறையாக கைது செய்யப்பட்டார்.
அரசாங்க ரகசியங்களை வெளிநாட்டிற்கு வழங்கியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது. ஆனால், அது குறித்து மேல்விவரங்கள் வழங்கப்படவில்லை.