கோலாலம்பூர்: பதவியைத் தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டுகளிலிருந்து முன்னாள் மலேசியப் பிரதமர் முகைதீன் யாசினை அந்நாட்டு உயர் நீதிமன்றம் விடுவித்துள்ளது.
திரு முகைதீன் பிரதமர் பதவி வகித்தபோது நடைமுறைப்படுத்தப்பட்ட சில அரசாங்கத் திட்டங்கள் தொடர்பில் அவர் தமது பதவியைத் தவறான முறையில் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
திரு முகைதீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று தீர்ப்பளித்த நீதிபதி முகம்மது ஜமில் உசின் கூறினார்.
அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள், குற்றங்கள் தொடர்பான எந்த ஒரு விவரத்தையும் முன்வைக்கவில்லை என்றார் அவர். இதனால் அவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து திரு முகைதீனால் தமது வழக்கறிஞர்களிடம் தெரிவிக்க முடியாமல்போனதாக நீதிபதி கூறினார்.
“கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் நியாயமான வழக்கைப் பெறும் உரிமை திரு முகைதீனுக்கு உண்டு. ஆனால் அவருக்கு எதிராக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் இதற்கு முரணாக இருந்தன.
“இத்தகைய வழக்கு விசாரணையைத் தொடர அனுமதித்தால் அதுதான் பதவியைத் தவறான முறையில் பயன்படுத்துவதாகும்,” என்றார் நீதிபதி.
திரு முகைதீனுக்கு எதிராகச் சுமத்தப்பட்டிருந்த நான்கு குற்றச்சாட்டுகளையும் அவர் தள்ளுபடி செய்தார்.
2020ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் சுமார் 17 மாதங்கள் மலேசியாவின் பிரதமராக திரு முகைதீன் இருந்தார். தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை அவர் மறுத்தார்.
அவற்றைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரி கடந்த ஏப்ரல் மாதம் 18ஆம் தேதியன்று அவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
திரு முகைதீன் மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டுகளை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமையன்று தள்ளுபடி செய்ததை அடுத்து, நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே காத்துக்கொண்டிருந்த அவரது ஆதரவாளர்கள் மகிழ்ச்சியுடன் ஆரவாரம் செய்தனர்.
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தமக்கு எதிராக இந்தக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக திரு முகைதீன் கூறினார்.