ஜார்ஜ்டவுன்: டத்தோ கெராமாட் சட்டமன்ற உறுப்பினர் ஜக்தீப் சிங் டியோ புதன்கிழமை பினாங்கு மாநிலத்தின் இரண்டாம் துணை முதல்வராகப் பதவி ஏற்றார்.
புதிய பத்து மாங் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் முகமது அப்துல் ஹமீது, பினாங்கு மாநிலத்தின் முதலாம் துணை முதல்வராகப் பதவி ஏற்றார்.
பினாங்கு மாநிலத்தின் புதிய நிர்வாக மன்றத்தில் ஏழு புதுமுகங்கள் புதன்கிழமை பதவி ஏற்றனர்.
அவர்களில் ஒருவர் பேராய் சட்டமன்ற உறுப்பினர் எஸ் சுந்தரராஜு.
வீடமைப்பு, சுற்றுப்புறத் துறைகளுக்குப் பொறுப்பேற்கும் திரு சுந்தரராஜூ, செபிராங் பேராயில் பி40 குழுவினருக்கு அதிக கட்டுப்படியாகும் விலையில் வீடுகள் வழங்குவதில் கவனம் செலுத்தப் போவதாகக் கூறியிருக்கிறார்.
முந்திய வீடமைப்புத் துறை நிர்வாக மன்றம் கட்டுப்படியாகும் விலையில் ஏகப்பட்ட வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தாலும், அவற்றில் பெரும்பகுதி தீவை மையமாகக் கொண்டிருந்ததாக அவர் கூறினார்.
பேராயில் இத்தகைய வீடமைப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்த நிறைய நிலப்பகுதிகள் இருப்பதாகவும் திரு சுந்தரராஜு பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் கூறினார்.
ஏற்கெனவே கட்டப்பட்ட மலிவுவிலை குடியிருப்புகளும் மேம்படுத்தப்படவேண்டும் என்றார் அவர்.
நில மேம்பாட்டாளராக 37 ஆண்டுகால அனுபவம் இருப்பதால், வீடமைப்புத் துறை தனக்குப் பழக்கப்பட்ட ஒன்று என்று அவர் குறிப்பிட்டார்.
நிறுவன உலகிலிருந்து சுமார் ஏழு மாதங்களுக்குமுன் ஓய்வுபெற்று விட்டதால், வீடமைப்புத் துறைக்குப் பொறுப்பேற்பதில் எந்த முரண்பாடுகளும் இருக்காது என்று அவர் கூறினார்.

