சிங்கப்பூர்: வியட்னாமிய ஏற்றுமதியாளர்கள் மறுபேச்சுவார்த்தை நடத்தி, கிட்டத்தட்ட 500,000 மெட்ரிக் டன் அரிசி விலையை உயர்த்தி இருப்பதாக இரண்டு வர்த்தகத் தரப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியா சென்ற மாதம் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்ததைத் தொடர்ந்து, மறுபேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது.
இந்தோனீசியா, பிலிப்பீன்ஸ் உள்ளிட்ட இறக்குமதியாளர்கள், ஒரு டன் நறுமண வியட்னாமிய அரிசிக்கு சுமார் 550 அமெரிக்க டாலர் விலைபேசி ஒப்பந்தம் செய்திருந்தனர். ஆனால், இந்தியா அரிசி ஏற்றுமதியைத் தடை செய்த பிறகு, பேசிய விலைக்குமேல் 30 முதல் 80 அமெரிக்க டாலர் வரை ஏற்றுமதியாளர்கள் இப்போது கொடுப்பதாக சிங்கப்பூரிலுள்ள வர்த்தகர்கள் கூறுகின்றனர்.
இந்த விலை உயர்வின்வழி விற்பனையாளர்களுக்கு 15 மில்லியன் டாலர் முதல் 40 மில்லியன் டாலர் வரை கூடுதல் வருமானம் கிடைத்தது.
இம்மாதம் சுமார் 200,000 டன் அரிசி ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும், மேலும் 300,000 டன் அரிசி வியட்னாமியத் துறைமுகங்களிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவிருப்பதாகவும் ஒரு வர்த்தகர் தெரிவித்தார்.
இந்நிலையில், இந்தியாவின் தடைக்குப் பிறகு அரிசி விலை 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஏறக்குறைய 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.
இந்தியா விதித்த தடையால், அனைத்துலகச் சந்தையில் அரிசி விநியோகம் 10 மில்லியன் டன் அல்லது 20 விழுக்காடு குறைந்துள்ளது.