ஃபைசலாபாத்: கிழக்கு பாகிஸ்தானில் புதன்கிழமையன்று இஸ்லாமிய சமயத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான ஆண்கள் நான்கு தேவாலயங்களை எரித்தனர். ஓர் இடுகாட்டையும் அவர்கள் சேதப்படுத்தினர்.
கிறிஸ்துவ சமயத்தைச் சேர்ந்த ஒரு குடும்பம் இறை நம்பிக்கையை மதிக்காமல் செயல்பட்டதாகக் கூறப்படுவதைத் தொடர்ந்து இச்சம்பவம் நிகழ்ந்தது.
“காவல்துறையினருக்கும் திரண்ட கூட்டத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. கூட்டம் பின்வாங்குவதாகத் தெரியவில்லை. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினரும் சிறப்புத் துணை சட்ட ஒழுங்கு அதிகாரிகளும் (ரேஞ்சர்ஸ்) பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,” என்று மாவட்ட அளவில் செயல்படும் அரசாங்க அதிகாரியான அஹாத் நூர், ஏஎஃப்பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
பாகிஸ்தானில் இறை நம்பிக்கையை மதிக்காமல் செயல்படுவது பெரும் பிரச்சினைகளை விளைவிக்கக்கூடிய ஒன்று. பெரும்பான்மை இஸ்லாமிய சமயத்தினரைக் கொண்ட அந்நாட்டில் அந்த சமயத்தையோ அதனுடன் தொடர்புடையோரையோ ஒருவர் இழிவுபடுத்தியது உறுதியானால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.

