ஒட்டாவா: சீனாவிலிருந்து சுற்றுலாக் குழுக்கள் பயணம் செல்ல அனுமதிக்கப்படும் நாடுகளில் கனடா விடுபட்டுப் போயிருப்பதற்கு சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளே காரணம் என்று ஒட்டாவாவில் உள்ள சீனத் தூதரக அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
கொவிட்-19 கிருமிப்பரவலின்போது சுற்றுலாக் குழுக்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல சீனா தடை விதித்திருந்தது. சென்ற வாரம், அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விதிக்கப்பட்ட தடையைச் சீனா விலக்கியது. ஆனால், கனடாவுக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படவில்லை.
கனடா “சீனாவின் தலையீடு” பற்றி திரும்பத் திரும்ப மிகைப்படுத்திப் பேசிவருவது இதற்கான காரணம் என்று சீனத் தூதரக அறிக்கை தெரிவித்தது.
“ஆசியருக்கு எதிரான பாரபட்சமான செயல்பாடுகளும் சொற்களும் கனடாவில் பெருமளவு அதிகரித்து வருகின்றன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
தற்போது 138 நாடுகளுக்கு சீனாவிலிருந்து சுற்றுலாக் குழுக்கள் பயணம் செல்ல அனுமதிக்கப்படுகிறது.
2018ல், கிட்டத்தட்ட 700,000 சீனப் பயணிகள் கனடாவுக்குச் சென்றனர். ஒவ்வொரு பயணியும் சராசரியாக 2,600 கனடிய டாலர் (S$2,618) செலவு செய்தனர்.
இதற்கிடையே, அனுமதிக்கப்படும் நாடுகளின் பட்டியலில் கனடா விடுபட்டுப்போனது ஏமாற்றம் அளிப்பதாக நயாகரா நீர்வீழ்ச்சியின் பயணத்துறை தலைவர் திருவாட்டி ஜெனிஸ் தாம்சன் கூறினார். எதிர்காலத்தில் கனடா மீண்டும் பட்டியலில் சேர்த்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

