மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேனில் மாஸ்கோவின் போர் நடவடிக்கைகளுக்கான தளபதியையும் இதர ராணுவ உயர் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகை (கிரெம்ளின்) தெரிவித்துள்ளது.
ரோஸ்டொவொன்டானில் உள்ள சிறப்பு ராணுவத் தலைமையகத்தில் திரு புட்டின் அவர்களைச் சந்தித்ததாகக் கூறப்பட்டது.
2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரேன் மீது மேற்கொண்ட படையெடுப்பை மாஸ்கோ அதன் சிறப்பு ராணுவ நடவடிக்கை என்றே கூறிவருகிறது.
ரஷ்ய ஆயுதப் படைத் தலைவர் ஜெனரல் வெலரி ஜெரசிமொவும் ராணுவ உயர் அதிகாரிகளும் எடுத்துரைத்த அறிக்கைகளை அதிபர் புட்டின் செவிமடுத்தார்.
ஜூலை மாதத்திற்குப் பிறகு சிறிய கிராமம் ஒன்றை மாஸ்கோவின் ஆதிக்கத்திலிருந்து விடுவித்ததாக உக்ரேன் கூறியதையடுத்து இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இருப்பினும் சந்திப்பு எந்தத் தேதியில் நடைபெற்றது என்றோ அதுகுறித்த மேல்விவரங்களையோ கிரெம்ளின் வெளியிடவில்லை.

