தோக்கியோ: ஃபுக்குஷிமா அணு ஆலையில் பயன்படுத்தப்பட்ட நீர், ஆகஸ்ட் 24ஆம் தேதியன்று கடலுக்கு அனுப்பப்படும் என்று ஜப்பான் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தது.
ஒரு மில்லியன் மெட்ரிக் டன் அளவிலான நீர் இவ்வாறு கடலுக்கு அனுப்பப்படும் திட்டத்திற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்திருப்பதற்கு இடையே இந்த அறிவிப்பு வந்துள்ளது.
தோக்கியோ இலெக்ட்ரிக் பவர் கம்பெனி (டெப்கோ) இயக்கிய ஆலையைச் செயல்படாமல் செய்து அதைப் பாதுகாப்பாக அகற்றும் திட்டத்துக்கு ஜப்பானிய அரசாங்கம் ஈராண்டுகளுக்கு முன் ஒப்புதல் வழங்கியது.
இருப்பினும், தங்களின் நற்பெயர் கெடும் என்று உள்ளூர் மீன்பிடிக் குழுக்கள் அஞ்சுவதுடன் தங்கள் வாழ்வாதாரத்திற்கு மிரட்டலும் விடுக்கும் என்ற நிலையில் இத்திட்டம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
“அதிகாரிகள் அனுமதித்துள்ள திட்டத்தின்படி கடலுக்கு ஆலை நீர் அனுப்பப்படுவதற்குத் துரிதமாகச் செயல்படுமாறு நான் டெப்கோவிடம் கூறியுள்ளேன். வானிலை நிலவரத்தைப் பொறுத்து நீர் ஆகஸ்ட் 24 அன்று கடலுக்கு அனுப்பப்படும் என்று எதிர்பார்க்கலாம்,” என்று ஜப்பானியப் பிரதமர் ஃபூமியோ கிஷிடா செவ்வாய்க்கிழமை காலை தெரிவித்தார்.
மீன்பிடித் துறையினர் நிலைமையைப் புரிந்துகொண்டுள்ளதன் அடிப்படையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது.
வியாழக்கிழமை தொடங்கி அடுத்த சுமார் 17 நாட்களுக்கு மொத்தம் 7,800 கன மீட்டர் நீர் கடலில் கலக்கும் என்று செவ்வாய்க்கிழமையன்று டெல்கோ தெரிவித்தது.
இவ்வாறு நீரைக் கடலுக்கு அனுப்புவது பாதுகாப்பானது என்று ஜப்பான் தொடர்ந்து கூறிவருகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஐக்கிய நாட்டின் அணு ஆலைப் பிரிவான ‘ஐஏஇஏ’, ஜூலை மாதம் இந்தத் திட்டத்திற்குப் பச்சைக் கொடி காட்டியது. அனைத்துலக தரநிலைகளைத் திட்டம் நிறைவேற்றி இருப்பதுடன் மக்கள் மீதும் சுற்றுச்சூழல் மீதும் அதன் தாக்கம் அற்பமானது என்று கூறப்பட்டது.
இத்தகைய உறுதிப்பாடுகளுக்கு இடையே அண்டை நாடுகள் இத்திட்டத்தின் பாதுகாப்பு தொடர்பில் ஐயப்பாடுகளை எழுப்பி வருகின்றன.