கோலாலம்பூர்: மலேசியாவில் இருவர் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
முதல் குரங்கம்மைச் சம்பவம் ஜூலை 26ஆம் தேதி பதிவானது. பாதிக்கப்பட்டவர் வெளிநாட்டு ஊழியர் என்று சுகாதார தலைமை இயக்குநர் டாக்டர் ராட்ஸி அபு ஹாசன் கூறினார்.
இரண்டாவது தொற்றுச்சம்பவம், ஜூலை 29ஆம் தேதி உறுதிப்படுத்தப்பட்டது. பாதிக்கப்பட்டவர் மலேசியர் என்று தெரிவிக்கப்பட்டது.
குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட இருவரும் தொடர்பில் இருந்தவர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் கண்டு, கண்காணித்து வருவதாகச் சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
அவர்களிடம் தொற்று தொடர்பான எந்த அறிகுறிகளும் இல்லை என்றும் மூன்றாவது சம்பவம் பதிவாகவில்லை என்றும் அமைச்சு கூறியது.
நோய்த்தொற்று திடீரென அதிகரிக்கலாம் என்பதால் அனைத்துச் சுகாதாரப் பணியாளர்களும் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
பத்து ஆய்வகங்கள் குரங்கம்மைப் பரிசோதனைச் சேவை வழங்குவதாக அமைச்சு தெரிவித்தது.
தொடர்புடைய செய்திகள்
குரங்கம்மை அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அந்த ஆய்வகங்களுக்குச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காய்ச்சல், சோர்வு, தலைவலி, தோலழற்சி போன்றவை குரங்கம்மைக்கான அறிகுறிகளாகும்.

