வெலிங்டன்: உக்ரேன் போரால் நாட்டைவிட்டு வெளியேறும் மக்களுக்கு நிரந்தரவாசத் தகுதிக்கான புதிய திட்டத்தை நியூசிலாந்து அறிவித்துள்ளது.
அடுத்த ஆண்டு மார்ச் 15ஆம் தேதிக்குள் தற்காலிக சிறப்பு உக்ரேன் விசாவில் நியூசிலாந்து செல்வோருக்கு நிரந்தரவாசத்தகுதி கிடைக்கும் என்று குடிநுழைவுத்துறை அமைச்சர் ஆன்ட்ரூ லிட்டில் தெரிவித்தார்.
“பாதுகாப்பு தேடி நியூசிலாந்து வந்துள்ள பலரும் நீண்டகாலத்திற்கு இங்கு இருப்போம் என்று நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். எனினும், உக்ரேன் போர் தொடரும் வேளையில் அந்நாட்டிலிருந்து வெளியேறி இங்கு வந்திருப்போருக்கு நிச்சயமிக்க சூழலை அவர்களுக்கு வழங்குவதற்கான பொறுப்பு எங்களுக்கு உள்ளது.
“நிரந்தரவாசத்துக்கு விண்ணப்பிப்பதற்கான செயல்முறையை நாங்கள் எளிதாக்கி உள்ளோம்,” என்று திரு ஆன்ட்ரூ கூறினார்.
விண்ணப்பதாரர்கள் மொழித் தேர்வு எழுதுவதற்கான தேவை இராது.
உக்ரேன்மீது ரஷ்யப் படையெடுப்புக்கு நியூசிலாந்து அரசின் பதில் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு சிறப்புப் பிரிவு அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை 1,500க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு உக்ரேன் விசா வழங்கப்பட்டுள்ளது.