பியோங்யாங்: வெளிநாடுகளில் இருக்கும் வடகொரியர்கள் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அந்நாட்டு அரசாங்கத்துக்குச் சொந்தமான கேசிஎன்ஏ ஊடகம் இதைத் தெரிவித்தது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவல் காலத்தில் வடகொரியா கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை விதித்தது. சில ஆண்டுகளாக நடப்பில் இருந்த அந்தக் கட்டுப்பாடுகள் இப்போது தளர்த்தப்படுகின்றன.
உலகளவில் கொள்ளைநோய்ப் பரவல் சூழல் சீராகியிருப்பதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக வடகொரியாவின் அவசர கொள்ளைநோய்ப் பரவல் தடுப்பு நிலையம் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அதை கேசிஎன்ஏ வெளியிட்டது.
நாடு திரும்பும் வடகொரியர்கள் ஒரு வாரத்துக்குத் தனிமைப்படுத்தப்படுவர் என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த 2020ஆம் ஆண்டில் பல நாடுகள் முடக்கநிலையை நடைமுறைப்படுத்தின. அதற்குப் பிறகு முதன்முறையாக அண்மையில் பியோங்யாங்கிலிருந்து புறப்பட்ட ஏர் கொர்யோ விமானம் ஒன்று சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் தரையிறங்கியது.
அதற்கு சில நாள்களுக்குப் பிறகு வெளிநாடுகளில் இருக்கும் வடகொரியர்கள் நாடு திரும்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.