சோல்: தென்கொரியாவில் 1.26 மில்லியனுக்கும் அதிகமான இளையர்கள் வேலையில்லாமல் உள்ளனர்.
அவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் பட்டப்படிப்பு முடித்தவர்கள் என்று கூறி அந்நாட்டு அரசாங்கம் ஞாயிற்றுக்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளது.
தென்கொரியாவின் மக்கள் தொகையில் 8.41 மில்லியன் பேர் 15 வயதுக்கும் 29 வயதிற்கும் இடைப்பட்டவர்கள்.
அவர்களில் 4.52 மில்லியன் பேர் பட்டப்படிப்பு முடித்தவர்கள் அல்லது தற்போது எந்தக் கல்வி நிலையத்திலும் கல்வி கற்காமல் உள்ளனர். அவர்களில் கிட்டத்தட்ட 1.26 மில்லியன் பேருக்கு வேலை இல்லை.
வேலை இல்லாமல் தடுமாறுபவர்களில் சுமார் 41 விழுக்காட்டினர் வேலைக்கான பயிற்சி, தேர்வுகள், அரசாங்க வேலைக்குத் தயாராகுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கிட்டத்தட்ட 25 விழுக்காட்டினர் வேலைக்குச் செல்ல எந்த நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர்.
தென்கொரியாவில் முதல் வேலை கிடைக்க சராசரியாக 10.4 மாதங்கள் தேவைப்படுவதாகத் தரவுகள் கூறுகின்றன. சில தரப்பினர் தங்களுக்கு முதல் வேலை கிடைக்க மூன்று ஆண்டுகளுக்கு மேலானது என்று கூறுகின்றனர்.
வேலையில் உள்ளவர்களில் 50.6 விழுக்காட்டினர் தாங்கள் படித்த படிப்புக்கும் வேலைக்கும் தொடர்பு இல்லை என்றும் கூறியுள்ளனர்.

