அமெரிக்காவில் இன அடிப்படையில் துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம்

அமெரிக்காவில் இன அடிப்படையில் துப்பாக்கிச்சூடு; நால்வர் மரணம்

1 mins read
8a6947af-8fd7-456a-a642-a0b10aa53319
ஜேக்சன்வில் நகரில் சம்பவ இடத்தில் இருந்த காவல்துறை வாகனங்கள். - படம்: ஏஎஃப்பி

ஜேக்சன்வில்: அமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் தாக்குதல்காரர் உட்பட நால்வர் மாண்டனர்.

இச்சம்பவம் ஜேக்சன்வில் நகரில் உள்ள கடை ஒன்றில் நிகழ்ந்தது. அதிக சக்தி கொண்ட துப்பாக்கியை வைத்திருந்த ஓர் ஆடவர் மூவரைக் கொன்ற பிறகு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இன ரீதியான காரணங்கள் இருந்ததாக சட்ட ஒழுங்கு அதிகாரிகள் கூறினர். தாக்குதல்காரருக்கு கறுப்பினத்தவரைப் பிடிக்கவில்லை என்று காவல்துறை அதிகாரி டி.கே.வாட்டர்ஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.

சந்தேக நபர் ஒரு வெள்ளை இனத்தவர் என்று அவர் சொன்னார். அவரின் பெயர் வெளியிடப்படவில்லை.

மாண்டோரில் இருவர் ஆண்கள் ஒருவர் பெண் என்றும் அவர்கள் மூவரும் கறுப்பினத்தவர் என்றும் திரு வாட்டர்ஸ் கூறினார்.

சந்தேக நபர் துணையின்றி இயங்கியதாக அதிகாரிகள் நம்புகின்றனர். கறுப்பினத்தவருக்கு எதிராகத் தனக்கிருந்த வெறுப்பைக் காட்டும் பல கருத்துகளை அவர் வெளியிட்டிருந்ததாகவும் திரு வாட்டர்ஸ் குறிப்பிட்டார்.

குறிப்புச் சொற்கள்