சுங்கை பூலோ: மனைவியுடன் ஏற்பட்ட சண்டையை அடுத்து, ஆடவர் ஒருவர் 12 மீட்டர் உயர விளம்பரப் பலகைமீது ஏறி அமர்ந்துகொண்ட சம்பவம் மலேசியாவில் நிகழ்ந்தது.
புங்காக் பெஸ்தாரி ஏரி அருகே அமைந்திருந்த அந்த விளம்பரப் பலகைமீது அந்த ஆடவர் ஏறி அமர்ந்துகொண்டதாக ‘தி ஸ்டார்’ செய்தி தெரிவித்தது.
இதனைத் தொடர்ந்து, திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில் உதவிகோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புத் துறையின் உதவி இயக்குநர் அகமது முக்லிஸ் முக்தர் தெரிவித்தார்.
“ஒரு தீயணைப்பு வண்டியையும் தீயணைப்பு வீரர்கள் ஐவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தோம். அங்கு சென்று பார்த்தபோது விளம்பரப் பலகைமீது ஒருவர் அமர்ந்துகொண்டு, சத்தமிட்டபடி இருந்ததை அவர்கள் கண்டனர்,” என்று திரு முக்தர் தெரிவித்தார்.
பின்னர் அந்த ஆடவரின் மனைவியும் அவரின் நண்பர்கள் சிலரும் பலமுறை கேட்டுக்கொண்டதை அடுத்து, காலை 10.30 மணியளவில் அவர் விளம்பரப் பலகையிலிருந்து கீழே இறங்கி வந்ததாக திரு முக்தர் கூறினார்.