ஆர்ச்சர்ட் ரோட்டில் உள்ள கான்கார்ட் ஹோட்டல், கடைத்தொகுதி கட்டடத்தில் ஆபத்தான ஆயுதங்களுடன் கலவரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் மேலும் ஒரு ஆடவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்த ஆடவர் செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார்.
ஆகஸ்ட் 20ஆம் தேதி காலை 6 மணியளவில் நடந்த கலவரத்தில் 24 வயது புதென்விலா கெய்த் பீட்டரும் இருந்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புதென்விலா மீதான விசாரணை செப்டம்பர் 5ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அந்தக் கலவரத்தில் தாக்கப்பட்ட முகமது இஸ்ராத் முகமது இஸ்மாயில் கடுமையான காயங்கள் காரணமாக மாண்டார்.
ஆர்ச்சர்ட் ரோடு கலவரம் தொடர்பாக இதுவரை 10க்கும் மேற்பட்ட ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஸ்வின் பச்சன் பிள்ளை சுகுமாரன், 29, இஸ்ராத்தை கொலை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற ஆடவர்கள் மீதான விசாரணை தொடர்கிறது.
ஒரு சச்சரவின் தொடர்பில் மோதல் இடம்பெற்றதாகவும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானவர்கள் என்றும் முன்னதாக அறிக்கை ஒன்றில் காவல்துறை தெரிவித்தது.
சம்பவம் தொடர்பாக இரண்டு பேனா கத்திகள், ரொட்டி வெட்டும் கத்தி ஆகியவற்றைக் காவல்துறை பறிமுதல் செய்தது.