லண்டன்: பிரிட்டனின் தேசிய மின்உற்பத்தி அமைப்பு, குளிர்காலத்தில் மின்சாரப் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்ளும் வீடுகளுக்குச் சலுகை வழங்கும் திட்டத்தை மீண்டும் அமல்படுத்தவிருக்கிறது.
சென்ற ஆண்டு அறிமுகமான அத்திட்டம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்போது மீண்டும் நடப்புக்கு வரும் என்று அமைப்பு கூறியது. மின்தடை ஏற்படுவதைத் தடுக்க இது உதவும் என்று அது குறிப்பிட்டது.
நீக்குப்போக்கான மின்சேவைத் திட்டத்தில் பதிவு செய்துகொள்ளும் வீடுகளுக்கு இச்சலுகை வழங்கப்படும். அவற்றின் மின்பயன்பாட்டுக் கட்டணத்தில் சலுகைக்கு ஈடான தொகை கழிக்கப்படும்.
திட்டத்தில் பதிந்துகொள்ளும் வீடுகள், மின்அடுப்பு, பாத்திரம் கழுவும் சாதனம் போன்றவற்றை, மின்தேவை அதிகமுள்ள நேரங்களில் பயன்படுத்தாமல் இருக்கவேண்டும்.
சென்ற ஆண்டு இத்திட்டத்தில் ஏறக்குறைய 1.6 மில்லியன் வீடுகள் பதிந்துகொண்டன. அதன்மூலம் 3,300 மெகாவாட்டுக்கும் அதிகமான மின்சாரம் சேமிக்கப்பட்டது. அது, கிட்டத்தட்ட 10 மில்லியன் வீடுகளுக்குத் தேவைப்படும் மின்சாரத்திற்கு ஈடானது.