பாரிஸ்: பிரான்சின் தலைநகரான பாரிஸ் நகரில் வாடகைக்குக் கிடைக்கும் மின்ஸ்கூட்டருக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. அந்தத் தடையை விதித்துள்ள முதல் ஐரோப்பிய நகரம் பாரிஸ்தான்.
வாடகை மின்ஸ்கூட்டர் தடை தொடர்பில் ஏப்ரல் மாதம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில் கலந்துகொண்டு வாக்களித்தவர்கள் குறைவுதான் என்றாலும் அத்தகைய வாகனங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று பலரும் தெரிவித்தனர்.
பாரிஸ் நகரில் தனியார் மின்ஸ்கூட்டர்களை ஒழுங்குபடுத்தக் கூடிய நிலை இல்லை.
ஆகையால் அத்தகைய தனியார் வாகனங்களுக்கு விதி விலக்கு உண்டு.
உலகம் முழுவதும் உள்ள நகர்களின் தெருக்களிலும் நடைபாதைகளிலும் மின்ஸ்கூட்டர்கள் 2019ஆம் ஆண்டில் இருந்து அதிகரிக்கத் தொடங்கின. இதனால் நகர அதிகாரிகளுக்குப் பல பிரச்சினைகள் ஏற்பட்டன.
அவற்றை ஒழுங்குபடுத்துவது மிகவும் சிரமமாகிவிட்டது.
சான் ஃபிரான்சிஸ்கோ, மயாமி போன்ற நகர்கள் அத்தகைய வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாகவே அவற்றுக்குத் தற்காலிகத் தடையை விதித்தன.

