நியூயார்க்: அமெரிக்காவில் வாழ்க்கைச் செலவு கூடிவிட்டது. சில்லறை விற்பனைக் கடைகளில் திருட்டு அதிகமாகிவிட்டது.
பற்பசை, ரொட்டி, மிட்டாய், சாக்லேட், துணி துவைக்கும் மாவு போன்ற அன்றாட பயன்பாட்டுப் பொருள்களைக் கடைக்காரர்கள் கடைகளில் பூட்டி வைத்து விற்கிறார்கள். இப்படிப்பட்ட கடைகள் அதிகமாகி உள்ளன.
திறந்து வைத்தால் பொருள்கள் திருடு போய்விடுகின்றன. சோப்பு, சீப்பு போன்ற சிறுசிறு பொருள்களைத் திருடுவோர், கடைகளில் பொருள்களை வாங்குவது போல் நடித்து திருடுவோர் அதிகரித்துவிட்டதாக பல கடைகள் கவலை தெரிவித்துள்ளன.
கொஞ்சம் அசந்தால்போதும், பொருள்கள் மாயமாகிவிடும் என்று அவை அச்சம் தெரிவித்துள்ளன.
வால்மார்ட், டார்கெட் போன்ற பிரபலமான கடைகளும் சிவிஎஸ், வால்கிரீன்ஸ் ஆகிய மருந்துக்கடைகளும் ஹோம் டெப்போ என்ற வீட்டுக்குத் தேவையான பொருள்களை விற்கும் கடையும் ஃபுட் லாக்கர் என்ற காலணிக் கடையும் வரவர தங்களுக்குப் பயம் அதிகமாகிவிட்டதாகத் தெரிவிக்கின்றன.
திருட்டு அதிகமாகிவிட்டது. சில நேரங்களில் வன்செயல் தலைதூக்குகிறது என்று அவை கவலை தெரிவித்தன.
திட்டம் போட்டு திருடும் கும்பல்களின் கைவரிசை அதிகமாகிவிட்டது. சாதாரண திருட்டுகளும் கூடிவிட்டன.
இந்தப் பிரச்சினை கடுமையான கட்டத்தை எட்டி இருக்கிறது என்று டிக்ஸ் ஸ்போர்ட்டிங் குட்ஸ் கடையின் தலைமை நிர்வாகி லாரென் ஹோபர்ட் ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது தெரிவித்தார்.