ஹவானா: உக்ரேன் போரில் ரஷ்யாவுக்காகப் போரிட கியூபா மக்களைக் கடத்தும் முயற்சியில் ஈடுபட்ட கும்பல் அடையாளம் காணப்பட்டுள்ளது. கியூபாவின் வெளியுறவு அமைச்சு திங்கட்கிழமையன்று இதைத் தெரிவித்தது.
போரில் ரஷ்யப் படைகளில் சேர்ந்துகொள்ளுமாறு கியூபர்களை ஈர்க்கும் முயற்சியில் அக்கும்பல் ஈடுபட்டது. கும்பலை உடைத்து செயலிழக்கச் செய்யும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.
அறிக்கை ஒன்றில் இந்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. அறிக்கையில் வெளியுறவு அமைச்சு அதிகத் தகவல்களை வெளியிடவில்லை.
ஆட்கடத்தல் கும்பல் கியூபா, ரஷ்யா ஆகிய இரு நாடுகளிலும் இயங்கி வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இரு நாடுகளும் பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் இருக்கின்றன.
ரஷ்யாவில் வாழும் கியூபர்கள் மட்டுமின்றி கியூபாவில் வாழ்வோரையும் உக்ரேனில் போரிடும் ரஷ்ய ராணுவப் படைகளில் சேர்த்துக்கொள்ள ஆட்கடத்தல் முயற்சி செய்து வந்தது; அக்கும்பலை உடைத்து செயலிழக்க வைக்க உள்துறை அமைச்சு நடவடிக்கை எடுத்து வருவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து ரஷ்ய அரசாங்கம் கருத்து தெரிவிக்கவில்லை.
தனது ஆயுதப் படையினரின் எண்ணிக்கையை 30 விழுக்காட்டுக்கும் மேலாக அதிகரிப்பதற்கான திட்டத்தை ரஷ்யா 2022ஆம் ஆண்டு அறிவித்தது. உக்ரேன் போரில் பல ராணுவ வீரர்கள் பலியாகிவிட்டதைத் தொடர்ந்து அந்த இலக்கை அடைவது சிரமமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

