கோலாலம்பூர்: மலேசியாவில் செய்திகளைப் பெற அவற்றை வழங்கும் நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்த வேண்டிய சூழல் கூகல், ஃபேஸ்புக் போன்ற தளங்களுக்கு ஏற்படலாம்.
அதற்கு வகைசெய்யும் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது குறித்து ஆலோசித்து வருவதாக செவ்வாய்க்கிழமையன்று மலேசியா தெரிவித்தது.
புதிய விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டால் கூகலை நடத்தும் அல்ஃபபெட், ஃபேஸ்புக்கை நடத்தும் மெட்டா போன்ற நிறுவனங்கள் பாதிக்கப்படும்.
இது குறித்து அல்ஃபபெட், மெட்டா உள்ளிட்ட பல்வேறு முக்கியமான தளங்களுடன் மலேசியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மலேசியத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) அறிக்கை ஒன்றில் இதைத் தெரிவித்தது.
இரு நிறுவனங்களையும் சேர்ந்த அதிகாரிகளுடன் சந்திப்பு நடத்திய பிறகு ஆணையம் அறிக்கையை வெளியிட்டது.
அல்ஃபபெட், மெட்டா போன்றவை செய்தி நிறுவனங்களுக்குக் கட்டணம் செலுத்தவேண்டியதைக் கட்டாயமாக்கும் விதிமுறையை ஆஸ்திரேலியா 2021ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தியது. அதேபோன்ற விதிமுறைகளைக் கொண்டுவர இப்போது மலேசியா ஆலோசித்து வருகிறது.