விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பெண் பயணிகள்;மன்னிப்புக் கேட்ட ‘ஏர் கனடா’

விமானத்திலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்ட பெண் பயணிகள்;மன்னிப்புக் கேட்ட ‘ஏர் கனடா’

படம்: ராய்ட்டர்ஸ்

06 Sep 2023 - 4:01 pm

2 mins read

ஒட்டாவா: லாஸ் வேகாஸிலிருந்து மாண்டிரியல் சென்ற விமானத்திலிருந்து இரண்டு பெண் பயணிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதற்கு ஏர் கனடா நிறுவனம் மன்னிப்புக் கேட்டுள்ளது.

ஆகஸ்ட் 26ஆம் தேதி ஐந்து மணி நேரம் பறக்கும் விமானத்தில் இரண்டு பயணிகளும் வாந்தியெடுத்த இருக்கையில் அமர மறுத்துவிட்டனர். இது குறித்து பணிப்பெண்களிடம் அவர்கள் புகார் அளித்தனர். ஆனால் காலி இருக்கை இல்லை என்பதால் அவர்களை பணிப்பெண்களும் விமானியும் வெளியேற்றிவிட்டனர்.

“ஏசி1706 விமானத்தில் இரு பெண்களும் இருக்கையில் அமர முடியாமல் தவித்தனர்,” என்று ஆகஸ்ட் 29ஆம் தேதி ஃபேஸ்புக் பதிவில் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்திருந்த திருமதி சூசன் பென்சன் குறிப்பிட்டிருந்தார்.

“ஆரம்பத்தில் என்ன பிரச்சினை என்பது தெரியவில்லை. ஆனால் துர்நாற்றம் வீசியது. இதற்கு முன்பு இதே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்த பயணி வாந்தியெடுத்திருக்கலாம். அவசர அவசரமாக சுத்தம் செய்து வாசனைத் திரவியத்தை தெளித்துள்ளனர். இருந்தாலும் ஆங்காங்கே வாந்தி சிந்திய அடையாளம் காணப்பட்டது என்று திருமதி பென்சன் தெரிவித்தார்.

இருக்கை வாரும் இருக்கையும் ஈரமாக இருப்பதாக இரு பயணிகளும் புகார் அளித்தும் எதுவும் செய்ய முடியாது என்று பணிப்பெண் கூறினார்.

பணிப்பெண்ணிடம் பயணிகள் வாக்குவாதம் செய்தனர். அங்கு வந்த மேற்பார்வையாளரும் பணிப்பெண் கூறியதையே ஒப்புவித்தார்.

வேறு வழியின்றி பயணிகள் இருக்கையில் அமர்ந்தபோது அங்கு வந்த விமானி ஒருவர், இரு வாய்ப்புகள் மட்டுமே இருப்பதாக அவர்களிடம் கூறினார். இந்த விமானத்தை விட்டுவிட்டு சொந்த செலவில் நீங்களே வேறு ஒரு விமானத்தில் செல்வது அல்லது இங்கிருந்து வெளியேற்றுவது என்று விமானி விமானத்திற்கு சொந்தக்காரர் போல பேசினார்.

ஏன் என்று பயணிகள் கேட்டதற்கு, அவர்கள் விமானப் பணிப்பெண்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டதாக விமானி கூறினார். அதே வரிசையில் இருந்த மற்றொரு பயணி நிலைமையை விளக்கினாலும் அங்கு வந்த பாதுகாவலர்கள் இரு பயணிகளையும் வெளியே அழைத்துச் சென்றனர்.

ஐந்து மணி நேரம் வாந்தியெடுத்த இருக்கையில் அமர மறுத்ததற்காக வெளியேற்றுவதா என்று திருமதி பென்சன் தமது பதிவில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் சிஎன்என் செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள அறிக்கையில் இரு பெண் பயணிகளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாக ஏர் கனடா நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த சம்பவத்தை விசாரித்து வருகிறோம். இரு பயணிகளிடம் தொடர்பில் இருக்கிறோம் என்று அது கூறியது.

குறிப்புச் சொற்கள்