பெஷாவர்: ஆப்கானிஸ்தான் எல்லையைக் கடந்து தாக்குதல் நடத்திய நூற்றுக்கணக்கான பாகிஸ்தானிய தலிபான் படையினரை எதிர்த்து பாகிஸ்தானிய ராணுவப் படையினர் புதன்கிழமை சண்டையிட்டு விரட்டியடித்ததாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சண்டை நடந்த மலைப்பிரதேசப் பகுதிக்குக் கூடுதல் ராணுவப் படையினர் அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் ஈராண்டுகளுக்குமுன் தலிபான் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் தெஹ்ரீக்-இ-தலிபான் படைக்கு அடைக்கலமும் ஆதரவும் அளித்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது. ஆனால் ஆப்கானிஸ்தான் இந்தக் குற்றச்சாட்டை மறுத்து வருகிறது.
“அவர்கள் நூற்றுக்கணக்கில் வந்தார்கள். இலகுவான, கனமான ஆயுதங்கள் வைத்திருந்தார்கள். நாங்கள் தாக்குதலைச் சந்திக்கத் தயாராக இருந்தோம். சுமார் நான்கு மணிநேரம் துப்பாக்கிச்சூடு நடந்தது,” என சிட்ரால் மாவட்டத்தின் துணை ஆணையர் திரு முகமது அலி ஏஎப்பி செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
இந்தத் தாக்குதலில் நான்கு பாகிஸ்தானிய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், “12 பயங்கரவாதிகள் நரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும்” பாகிஸ்தானிய ராணுவத்தின் பொதுத் தொடர்புப் பிரிவு வெளியிட்ட அறிக்கை குறிப்பிட்டது.
“எல்லைக்கு அருகிலுள்ள பகுதிகளில் அவர்களது நடவடிக்கைகளை இரண்டு அல்லது மூன்று நாட்களாகக் கண்காணித்து வந்தோம். அவர்களின் நடமாட்டம் பற்றி உளவாளிகளும் எங்களுக்குத் தகவல் அனுப்பினார்கள்,” என்று திரு அலி தெரிவித்தார்.
இந்நிலையில், சிட்ராலின் பொம்புரிட் பகுதியிலுள்ள இரு ராணுவச் சாவடிகளைக் கைப்பற்றிவிட்டதாக பாகிஸ்தானிய தலிபான் படை அறிக்கை வெளியிட்டது.
இதற்கிடையே, சிட்ராலுக்கு செல்லும் பாதையைப் பாதுகாப்புப் படையினர் மூடிவிட்டதாக காவல்துறை அதிகாரி கரீம் கான் தகவல் அளித்தார்.
அங்கிருக்கக்கூடிய மற்ற பயங்கரவாதிகளைத் துடைத்தொழிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
பாகிஸ்தானிய தலிபான் படை, ஒரு காலத்தில் தலைநகரிலிருந்து வெறும் 140 கிலோமீட்டர் தூரத்திலிருந்த மலைப் பிரதேசங்களில் இஸ்லாமியச் சட்டத்தை நிலைநாட்டி தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தது.
ஆனால், ராணுவ ஊழியரின் பிள்ளைகள் படித்துவந்த ஒரு பள்ளியை 2014ல் தலிபான் படையினர் தாக்கியதில் கிட்டத்தட்ட 150 பேர் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு, தலிபானுக்கு எதிராக பாகிஸ்தானிய ராணுவம் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியது.
இதனால் பாகிஸ்தானிய தலிபான் படையினர் பலரும் ஆப்கானிஸ்தானில் தஞ்சமடைந்தனர். இப்போது, தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானிலிருந்து எல்லைகடந்துவந்து பாகிஸ்தானிய தலிபான் படை தாக்குதல் நடத்துவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுகிறது.