மலாக்கா: பத்து பரெண்டாமில் உள்ள மலாக்கா அனைத்துலக விமான நிலையத்திற்கு விமானச்சேவை நிறுவனங்களை ஈர்ப்பதற்காக, சிறப்பு ஊக்கச் சலுகைகளை வழங்க மலாக்கா அரசாங்கம் முன்வந்துள்ளது.
அண்மையில் இரு விமானச்சேவை நிறுவனங்கள் மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் சேவை வழங்குவதை நிறுத்திக்கொண்டன.
“போதுமான பயணிகள் இல்லாததும் உயர் செலவுகளும் இதற்கான காரணம் என்று விமானச்சேவை நிறுவனங்கள் கூறின,” என்று மலாக்கா மாநில பணி, உள்கட்டமைப்பு, பொது வசதிகள், போக்குவரத்துக் குழுத் தலைவர் டத்தோ ஹமீத் மைதீன் குஞ்சு பஷீர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணங்களை மலாக்கா விமான நிலையத்திற்குக் கொண்டு வருவதற்காக இதுவரை ஆறு விமானச்சேவை நிறுவனங்களைச் சந்தித்திருப்பதாக அவர் கூறினார்.
“இதுவரை சாதகமான (பதில்) எதுவும் கிடைக்கவில்லை… அவர்களை ஈர்ப்பதற்கான முயற்சிகளை நாங்கள் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்,” என்றார் அவர்.
மலாக்காவில் செப்டம்பர் 29ஆம் தேதி அனைத்துலக விமானக் காட்சி நடைபெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆஸ்திரேலியா, ரஷ்யா, தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் விமானத் துறையினரும், உள்ளூர் அரசாங்க அமைப்புகளும் அந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் பங்குபெறும்.
மலாக்கா அனைத்துலக விமான நிலையத்தில் விமானப் பயணங்கள் எதுவும் இல்லையென த ஸ்டார் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குத் திரு ஹமீத் மைதீன் பதில் அளித்தார்.
தொடர்புடைய செய்திகள்
செப்டம்பர் 5ஆம் தேதி விமான நிலையத்திற்கு வருகையளித்த த ஸ்டார் செய்தியாளர்கள், அங்கிருந்த முகப்புகள் அனைத்தும் சென்ற மாதத்திலிருந்து காலியாகக் கிடப்பதைக் கண்டறிந்தனர். த ஸ்டார் / ஆசியா நியூஸ் நெட்வொர்க்