கோலாலம்பூர்: மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிமின் ஆளும் கூட்டணி, சனிக்கிழமை நடைபெற்ற ஜோகூர் இடைத்தேர்தலில் இரு தொகுதிகளையும் தக்கவைத்துக்கொண்டது.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர்கள் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதியையும் புலாய் நாடாளுமன்றத் தொகுதியையும் வென்றனர்.
நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் பெரும்பான்மையுடன் கூடிய வெற்றியைப் பதிவுசெய்த சலாஹுடின் அய்யுப் ஜூலை 23ஆம் தேதி காலமானதைத் தொடர்ந்து அவ்விரு தொகுதிகளும் காலியாகின.
வடமேற்கு ஜோகூரில் சிம்பாங் ஜெராம் தொகுதியை பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியிடமிருந்து எதிர்க்கட்சி கைப்பற்றிவிடும் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
எனினும், அக்கூட்டணியின் நஸ்ரி அப்துல் ரஹ்மான் 13,844 வாக்குகளைப் பெற்று வாகை சூடினார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பெரிக்கத்தான் நேஷனலின் முகம்மது மஸ்ரி யஹ்யா 10,330 வாக்குகளைச் சேர்த்தார். இந்த மும்முனைப் போட்டியில் சுயேச்சை வேட்பாளர் எஸ்.ஜெகநாதன் 311 வாக்குகளை மட்டும் பெற்றார்.
புலாய் தொகுதியில் வெற்றியைப் பெற முடியும் என பக்கத்தான் ஹரப்பான் நம்பிக்கையுடன் இருந்தது. காலஞ்சென்ற சலாஹுடின், 2020 தேர்தலில் தம்முடன் போட்டியிட்ட வேட்பாளரைவிட 51 விழுக்காடு வாக்கு வித்தியாசத்தில் வென்றிருந்தார். ஆனால், அந்த வாக்கு வித்தியாசம் இந்த முறை 39 விழுக்காடாகக் குறைந்தது.
பக்கத்தான் ஹரப்பான் வேட்பாளர் சுஹைஸான் கய்யத் 48,283 வாக்குகளைப் பெற்று வென்றார். பெரிக்கத்தான் நேஷனலின் ஸுல்கிஃப்லி ஜாஃபர் 29,642 வாக்குகளையும் சுயேச்சை வேட்பாளர் சம்சுதீன் முகம்மது ஃபவ்ஸி 528 வாக்குகளையும் பெற்றனர்.
கடந்த பொதுத் தேர்தலில் ஜோகூரில் 26 நாடாளுமன்றத் தேர்தலில் 23ல் தேசிய முன்னணியும் பக்கத்தான் ஹரப்பானும் வென்றிருந்தன. மலேசியாவில் அடுத்த பொதுத் தேர்தல் 2027க்குள் நடத்தப்பட வேண்டும்.