டிக்த்: மொரோக்காவில் வெள்ளிக்கிழமையன்று நிகழ்ந்த நிலநடுக்கத்தில் அட்லஸ் மலைப்பகுதியில் இடிந்த கட்டடங்களுக்கு இடையே உயிர் பிழைத்திருப்பவர்களைத் தேடும் பணியில் வெளிநாட்டுக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
இதன் தொடர்பில் ஞாயிறன்று வெளியிடப்பட்ட அரசு புள்ளிவிவரங்களின்படி, வெள்ளிக்கிழமை இரவு ரிக்டர் அளவு 6.8 எனப் பதிவான நிலநடுக்கத்தில் 2,000க்கும் மேற்பட்டோர் மாண்டதுடன் மேலும் 2.400க்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் பலருக்கு பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
துயர் துடைப்புப் பணிகளில் உதவ நான்கு நாடுகள் முன்வந்துள்ளதாகவும் அவற்றைத் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் மொரோக்கா கூறியது. இவைதவிர மேலும் பல நாடுகள் உதவ முன்வந்துள்ளதாகவும் மொரோக்கோ அரசு தெரிவித்துள்ளது.
இடிபாடுகளுக்கு இடையே சிக்கியிருப்பவர்களை தேட உதவ முன்வந்துள்ள ஸ்பெயின், பிரிட்டன், கத்தார், ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் நாடுகளின் தேடுதல் குழுக்களைத் தான் ஏற்றுக்கொண்டுள்ளதாக மொரோக்கோ நாட்டின் உள்துறை அமைச்சு தெளிவுபடுத்தியது.
பல வெளிநாட்டுக் குழுக்களுடன் மொரோக்கோ அரசு அதிகாரிகள் தொர்பில் இருப்பதாகவும் ஆனால், தற்போதைய நிலையில் ஒருங்கிணைப்புப் பிரச்சினைகளைத் தவிர்க்க நான்கு வெளிநாட்டுக் குழுக்களின் உதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் விளக்கினர்.
இதில் தேவை ஏற்படும்போது மற்ற குழுக்களின் உதவி ஏற்கப்படும் என்றும் உள்துறை அமைச்சு அதிகாரிகள் கூறினர்.
மொரோக்கோ உதவி நாடும் அடுத்த வினாடியே அங்கு உதவி சென்றடையும் என்று பிரான்ஸ் நாட்டு அதிபர் மெக்ரோன் தெரிவித்தார்.
இதற்கிடையே, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் அவசர மனிதநேய உதவியாக $200,000 மொரோக்கோவின் ‘ரெட் கிரசெண்ட்’ அமைப்பு கொடுத்து உதவியதாக சீன நாட்டு ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
தொடர்புடைய செய்திகள்
இதுபற்றிக் கூறிய சீன செஞ்சிலுவைச் சங்கம், இந்த நன்கொடை நிதி மெரோக்கோ நாட்டு மீட்புப் பணிகள், துயர் துடைப்புப் பணிகளுக்கு உதவியாக இருக்கும் என்று தெரிவித்தது.

