மலேசியாவின் சிலாங்கூரில் செப்டம்பர் 9ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் மணமக்களுக்கான மோதிரங்களை, தொலை இயக்கி மூலம் கட்டுப்படுத்தப்படும் பொம்மை காரில் கொண்டுவந்து தந்தது, லில்லி எனப் பெயரிடப்பட்டுள்ள பூனை.
டிக்டாக் தளத்தில் வெளியான அந்தக் காணொளி இதுவரை 2.4 மில்லியனுக்கு மேற்பட்டமுறை பார்க்கப்பட்டுள்ளது.
மணவிழாவில் நிகழ்ச்சி நெறியாளராகச் செயல்பட்ட மலேசியத் தொலைக்காட்சிப் படைப்பாளர் ஃபெத்ரி யஹ்யா அந்தக் காணொளியைப் பதிவேற்றியுள்ளார்.
எலும்பு அறுவை சிகிச்சை வல்லுநரான மணமகள் அயுனியின் பூனை அது. தனது திருமண வரவேற்பில் அதற்கு முக்கியப் பங்கு அளிக்க அவர் விரும்பியதாகக் கூறப்பட்டது.
டிஸ்னி நிறுவனத்தின் ‘த அரிஸ்டோகேட்ஸ்’ படத்தில் வரும் மேரி கதாபாத்திரத்தைப்போல காணொளியில் ‘லில்லி’ இளஞ்சிவப்பு வண்ண ரிப்பன் அணிந்து காணப்படுகிறது.
நிகழ்ச்சியில் பதற்றமின்றி அந்தப் பூனை செயல்பட்டதை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

