சில்வர் ஸ்பிரிங்: அண்மையில் பரவி வரும் ஓமிக்ரான் புதிய வகை கிருமியை எதிர்க்கும் நோக்கத்துடன் ஃபைசர்/பயோஎன்டெக் மற்றம் மொடர்னா நிறுவனங்களின் கொவிட்-19 தடுப்பூசி மருந்துகளுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது.
இந்த இரு நிறுவனங்கள் தவிர, நோவாவேக்ஸ் தயாரித்து உள்ள தடுப்பூசி மருந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மறுஆய்வில் உள்ளது.
செவ்வாய்க்கிழமை நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிலையத்தின் கூட்டத்திற்கு முன்னதாக தனது தடுப்பூசிக்கு அதிகாரிகள் அனுமதி அளிப்பார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்று நோவாவேக்ஸ் நிறுவனம் திங்கட்கிழமை கூறியது.
யாருக்கெல்லாம் இந்நிறுவனத்தின் தடுப்பூசி பொருந்தும் என்பதை ஆலோசிப்பதற்கான கூட்டம் அது.
அதேநேரம் ஓமிக்ரான் எக்ஸ்பிபி.1.5 கிருமி வகைக்கு எதிரான தங்களது தடுப்பூசிக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளதைத் தொடர்ந்து அந்தத் தடுப்பூசி, வரும் நாள்களில் அமெரிக்க மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று ஃபைசர், மொடர்னா நிறுவனங்கள் கூறியுள்ளன.
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு இந்தப் புதிய தடுப்பூசி மருந்துகள் பரிந்துரைக்கப்பட்டு உள்ளன. அதேநேரம் ஆறு வயது முதல் 11 வயது வரையிலான பிள்ளைகளுக்கு அவசரகால தடுப்பூசியாகப் பயன்படுத்தவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.