கியவ்: கிரைமியாவின் துறைமுக நகரான செவாஸ்டோபோலில் புதன்கிழமை அதிகாலை ஏவுகணைத் தாக்குதலை உக்ரேன் நடத்தியது. ரஷ்யாவின் ஆகாயத் தற்காப்பு முறை அந்தத் தாக்குதலை முறியடிக்கும் முயற்சியில் இறங்கியதாக செவாஸ்டோபோல் ஆளுநர் தெரிவித்தார்.
ஏவுகணைத் தாக்குதலால் தீ விபத்து ஏற்பட்டதாக டெலிகிராம் செயலியில் மிகைல் ராஸ்வோஸாயேவ் கூறினார். ஆனால் அதுகுறித்த மேல்விவரங்களை அவர் வெளியிடவில்லை.
செவாஸ்டோபோல் கப்பல் பட்டறையில் தீ மூண்டதாக ரஷ்யாவின் டெலிகிராம் செய்தி ஒளிவழிகள் குறிப்பிட்டன.
இந்த விவகாரம் குறித்து கியவ் தரப்பிலிருந்து கருத்து எதுவும் வெளிவரவில்லை.
ரஷ்யாவிலோ உக்ரேனில் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியிலோ நடத்தப்படும் தாக்குதல்களுக்கு உக்ரேன் எப்போதும் பொறுப்பேற்பதில்லை. ஆனால், ரஷ்யாவின் ராணுவக் கட்டமைப்பை அழிப்பது கியவ்வின் பதில் தாக்குதல்களுக்கு உதவுவதாக அண்மைய மாதங்களாக உக்ரேன் கூறி வருகிறது.

