சோல்: தென்கொரிய அதிபர் யூன் சுக்-யோல், ஆளும் கட்சியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மூன்று நட்சத்திர ஜெனரல் திரு ஷின் வொன்-சிக் என்பவரைப் புதிய தற்காப்பு அமைச்சராகத் தேர்ந்தெடுத்திருப்பதாக அதிபர் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது.
வடகொரியா சரமாரியாக ஏவுகணைச் சோதனைகளை நடத்திவருகையில் திரு ஷின்னை அதிபர் முன்மொழிந்திருக்கிறார்.
“வடகொரியாவின் அணுவாயுத, ஏவுகணை மிரட்டல்களுக்கு எதிராக நமது பாதுகாப்பு ஆற்றலை நிலைநாட்டுவதற்கு அவரே (ஷின்) சரியானவர். அவருக்குத் தற்காப்புக் கொள்கையிலும் உத்தியிலும் நிறைய அனுபவம் உள்ளது,” என்று அதிபர் அலுவலக அதிகாரி திரு கிம் டே-கி செய்தியாளர்களிடம் கூறினார்.
மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த திரு ஷின், “கடுமையான பாதுகாப்பு சவால்களுக்கு” மத்தியில் மக்கள் நிம்மதியாக வாழ தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாகக் கூறினார்.
தென்கொரிய அதிபர் திரு யூன், கலாசார, பாலினச் சமத்துவ அமைச்சர்களையும் மாற்றியிருக்கிறார். இவ்விரு அமைச்சர்களும் சென்ற மாதம் தென் கொரியாவில் நடைபெற்ற உலகச் சாரணர் நிகழ்ச்சியின் ஏற்பாட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்தனர். அந்நிகழ்ச்சியில் பல்வேறு பாதுகாப்பு, சுகாதாரப் பிரச்சினைகள் எதிர்நோக்கப்பட்டன.
திரு யூன் தேர்ந்தெடுத்துள்ள மாற்று அமைச்சர்களின் நியமனம், நாடாளுமன்றத்தின் ஏற்புக்கு உட்பட்டது.