கியவ்: உக்ரேனின் தெற்கு, மத்திய, வடக்குப் பகுதிகளில் இரவு நேரத்தில் 22 ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு ரஷ்யா தாக்குதல் நடத்தியதாகவும் அவற்றில் 17 வானூர்திகளைத் தாங்கள் சுட்டு வீழ்த்திவிட்டதாகவும் உக்ரேன் வியாழக்கிழமை தெரிவித்தது.
ரஷ்யப் படைகள், செப்டம்பர் 13ஆம் தேதி இரவு 9 மணி முதல் பின்னிரவு 2.30 மணிவரை மூன்று திசைகளிலும் தாக்கியதாக உக்ரேனின் விமானப்படை டெலிகிராமில் தெரிவித்தது.
எப்போதுமே ரஷ்யா ஏவுகணைகளைப் பாய்ச்சி தாக்கும். ஆனால் இப்போதெல்லாம் அது ஷாஹெட் 136/131 ரக ஆளில்லா வானூர்திகளைக் கொண்டு அதிகம் தாக்குதல் நடத்தி வருகிறது என்று உக்ரேன் கூறியது.
இந்த வகை வானூர்திகள் ஈரானில் தயாரிக்கப்படுகின்றன. இவை சிறியவை, வேகம் குறைவானவை. கெட்டிக்காரத்தனமாகச் செயல்பட்டு எதிரிகளைக் குழப்பி விடுவதில் இவை கைதேர்ந்தவை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

