வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையின் நிதிக் குழு வியாழக்கிழமை ஒரு மசோதாவை நிறைவேற்றியது.
அந்த மசோதா, அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான பொருளியல் உறவுகளை மேலும் ஆழப்படுத்துகிறது.
அமெரிக்கக் கணினிச்சில்லு தொழில்துறையில் தைவானிய முதலீடுகள் மேலும் இடம்பெற வழிவகுக்கும் வகையில் வரி உடன்பாடு ஒன்றை நடைமுறைப்படுத்த அந்த மசோதா வழிவகுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்கா இத்தகைய மசோதாவை நிறைவேற்றி இருப்பதால் சீனா கோபமடையும். அதனால் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் பதற்றம் மேலும் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
அமெரிக்க-சீன உறவை நிலைப்படுத்தும் நோக்குடன் அமெரிக்காவின் அதிபர் பைடன் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அந்த மசோதா நிறைவேறி இருக்கிறது.
மசோதா நிறைவேறி இருப்பதை அடுத்து அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையில் இரட்டை வரி விதிப்பு ஏற்பாடு முடிவுக்கு வரும்.
இந்த ஏற்பாடு இதுநாள் வரை நடைமுறையில் இருந்து வருவதால் அமெரிக்காவுக்கும் தைவானுக்கும் இடையிலான தொழில்துறை உறவுகள் பாதிக்கப்பட்டு உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவில் தொழில் நடத்தும் தைவானிய நிறுவனங்களும் தனிப்பட்டவர்களும் அமெரிக்காவிலும் தைவானிலும் வரி செலுத்த வேண்டும். அதேபோல, அமெரிக்க நிறுவனங்களும் செய்ய வேண்டி இருக்கிறது.
ஆனால், இந்த இரட்டை வரி ஏற்பாட்டுக்கு அந்த மசோதா முடிவு கட்டிவிடும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.