வாஷிங்டன்: அமெரிக்காவில் தான் வசித்த குடியிருப்புப் பகுதியில் மான்கள் சாலையைக் கடக்க உதவிய ஆடவரை அவ்வழியே சென்ற ஒரு மோட்டார்சைக்கிளோட்டி சுட்டுக் கொன்றார்.
அந்த ஆடவரால் தனக்கு ஆபத்து இருப்பதாக நினைத்ததால் அவரைச் சுட்டுக்கொன்றதாக மோட்டார்சைக்கிளோட்டி கூறினார்.
37 வயது டேன் ஸ்பெயத் எனும் ஆடவர், மான்கள் சாலையைக் கடப்பதை அங்கு சென்ற வாகனமோட்டிகளுக்குத் தெரியப்படுத்தும் முயற்சியில் தன் மனைவி அலிசாவுடன் ஈடுபட்டார். அப்போது அந்த வழியில் வந்த மோட்டார்சைக்கிளோட்டி திரு ஸ்பெயத்தைச் சுட்டுக் கொன்றார்.
இச்சம்பவம் செப்டம்பர் மாதம் ஏழாம் தேதியன்று வாஷிங்டன் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் நிகழ்ந்தது.
சந்தேகப் பேர்வழியான 22 வயது டைலன் பிக்கார்ட் எனும் ஆடவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறையினர் தெரிவித்தனர். அவர்மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியது.
திரு ஸ்பெயத்தும் அவரின் மனைவியும் சாலையை மறைத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தபோது தான் அஞ்சியதாகவும் அவர்களைத் துரத்த எண்ணம் கொண்டதாகவும் பிக்கார்ட் கூறினார் என்று வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் சொன்னது.
எனினும், ஆபத்து இருப்பதாக எவ்வித அறிகுறியும் இல்லாத சூழலில்தான் பிக்கார்ட் துப்பாக்கியால் சுட்டார் என்று நீதிமன்ற ஆவணம் தெரிவிக்கிறது.