சிட்னி: சிட்னி உட்பட ஆஸ்திரேலியாவின் தென்கிழக்குப் பகுதி கடும் வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதம் வழக்கமாகப் பதிவாகும் வெப்பநிலையைவிட இம்முறை வெப்பநிலை 16 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என்று அந்நாட்டின் வானிலை மையம் எதிர்பார்க்கிறது.
இந்தக் கடும் வெப்பநிலை புதன்கிழமை வரை தென்ஆஸ்திரேலியா, விக்டோரியா, நியூ சவுத் வேல்ஸ் ஆகிய மாநிலங்களில் நீடிக்கும் என்று முன்னுரைக்கப்பட்டுள்ளது.
இந்த கடும் வெப்பநிலையால் காட்டுத் தீ ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக ஆஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காட்டுத் தீ ஏற்பட்டால் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள பல இடங்களில் குடியிருப்பாளர்கள் தயார்நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் கிட்டத்தட்ட 50 இடங்களில் காட்டுத் தீ மூண்டது. ஆனால் அவை அனைத்தும் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

