சிரம்பான்: மலேசியாவில் சாலைப் போக்குவரத்துப் பிரிவு (ஜேபிஜே) அதிகாரிமீது மோதிய மோட்டார்சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டுள்ளார். சாலைத் தடுப்பைத் தவிர்ப்பதற்காக அந்த மோட்டார்சைக்கிளோட்டி அவ்வாறு செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து அதிகாரி சாலையில் சில மீட்டர் தூரம் வீசியெறியப்பட்டு விழுந்தார். இச்சம்பவம் மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள சிரம்பான்-போர்ட் டிக்சன் விரைவுச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு நிகழ்ந்தது.
சம்பவம் பதிவான காணொளியை சமூக ஊடகங்களில் பலர் பகிர்ந்துகொண்டனர்.
அரசாங்க ஊழியரை அச்சுறுத்தும் நோக்கில் வன்முறையில் ஈடுபடுவது தொடர்பிலான சட்டத்தின்கீழ் மோட்டார்சைக்கிளோட்டி கைது செய்யப்பட்டார். நான்கு நாள்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவரின் மோட்டார்சைக்கிளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த 25 வயது மோட்டார்சைக்கிளோட்டிக்கு சரியான காப்புறுதியோ மோட்டார்சைக்கிளை ஓட்ட தகுந்த உரிமமோ இருந்ததாகத் தெரியவில்லை என்று ஜேபிஜே அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.