ஜெனீவா: உக்ரேனியப் படையெடுப்புக்குப் பிறகு ரஷ்யாவில் மனித உரிமைகள் நிலவரம் குறிப்பிடத்தக்க அளவில் மோசமடைந்திருப்பதாக ஐக்கிய நாட்டு நிறுவன (ஐநா) வல்லுநர் ஒருவர் கூறியிருக்கிறார்.
லாப நோக்கமற்ற, அரசு சாரா சமூக அமைப்புகள்மீதான ஒடுக்குமுறை நிகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
அமைதியான ஒன்றுகூடுதல், கருத்துச் சுதந்திரம் போன்ற அம்சங்களை ரஷ்ய அதிகாரிகள் தீவிரமாகக் கட்டுப்படுத்தியிருப்பதாகவும் நீதித்துறையின் சுதந்திரம், நியாயமான விசாரணை நடைமுறை ஆகியவற்றை அவர்கள் கீழறுத்ததாகவும் அந்த வல்லுநர் கருத்துரைத்துள்ளார்.
“எதிர்ப்பாளர்கள்மீது காரணமின்றி நிர்வாகத் தடைகள் விதிக்கப்படுகின்றன. அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் செய்வோர்மீது ஒடுக்குமுறை பயன்படுத்தப்படுகிறது,” என்றார் அவர்.
ஐநா மனித உரிமைகள் மன்றம் அதன் ‘பி5’ உறுப்பு நாடுகள் ஒன்றில் மனித உரிமை நிலவரம் குறித்து வல்லுநர் அறிக்கைக்கு ஏற்பாடு செய்திருப்பது இதுவே முதல்முறை.
ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிரந்தர உறுப்பியம் பெற்றுள்ள ஐந்து நாடுகள் ‘பி5’ நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த அறிக்கை குறித்து ஜெனீவாவில் அமைந்திருக்கும் ரஷ்ய அரசதந்திரத் தரப்பு உடனடியாகக் கருத்துரைக்கவில்லை.