மெக்சிகோ சிட்டி: பொம்மையையும் அதன் உரிமையாளரையும் கைவிலங்கிட்டு, கைதுசெய்து சிறையில் அடைத்த நிகழ்வு மெக்சிகோ நாட்டில் இடம்பெற்றுள்ளது.
கார்லோஸ் ‘என்’ என்றழைக்கப்படும் அந்தப் பாவைக்கூத்துக் கலைஞர், ‘பேய் பொம்மை’யைக் காட்டி, மக்களை மிரட்டி, பணம் பறித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
அமைதிக்கும் மற்றவர்களின் நேர்மைக்கும் குந்தகம் விளைவிக்க முயன்றதாக கார்லோஸ் ‘என்’ மீதும் ‘சக்கி’ என்ற அந்த ‘பேய் பொம்மை’ மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
காவல்துறை அதிகாரி ஒருவர், சக்கியின் உடையில் பொருத்தப்பட்டிருந்த நீண்ட வாளைப் பிடித்துச் சிரித்தபடி இருந்ததைப் படங்கள் காட்டின.
சக்கிக்குக் கைவிலங்கிட்ட அந்தப் பெண் அதிகாரி, தனது வேலையைத் தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறி, எச்சரிக்கப்பட்டதாக மெக்சிகோ ஊடகச் செய்திகள் தெரிவித்தன.
கார்லோஸ் ‘என்’ பின்னர் விடுவிக்கப்பட்டார். ஆயினும், சக்கியின் நிலை என்னவானது எனத் தெரியவில்லை என்று உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறின.