ஈப்போ: மலேசியாவில் தெலுக் செனாங்கின் கடற்கரையில் ஏறக்குறைய மூழ்கிக் கொண்டிருந்த மற்றொரு நபரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற 19 வயது இளையர் உயிரிழந்தார்.
மலேசிய குடிமைத் தற்காப்புப் படையின் மாஞ்சுங் மாவட்ட அதிகாரியான சுலியானா முஹமட், ஞாயிற்றுக்கிழமை காலை பத்து மணியளவில் இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாகக் கூறினார்.
இறந்தவர், பினாங்கில் உள்ள சுங்கை பாகாப்பைச் சேர்ந்த முஹமட் ஃபாமி ஹஃபிஸி முஹமட் ஃபட்ஸில் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
“சம்பவத்தின்போது கடலில் அவர் நீந்திக் கொண்டிருந்தார். அப்போது அவரை நோக்கி வந்த ஒருவர் உதவி கேட்டு கூக்குரலிட்டார். ஏறக்குறைய மூழ்கும் நிலையில் இருந்த அந்த நபர் ஒருவழியாகக் காப்பாற்றப்பட்டார். ஆனால் அவருக்கு உதவி செய்த இளையர் பெரிய அலையால் அடித்துச் செல்லப்பட்டு காணாமல்போனார்.
“தீயணைப்பாளர்கள், மீனவர்கள் உதவியுடன் அவரது உடலைத் தேடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
“மோசமான பருவநிலை காரணமாக தேடி மீட்கும் முயற்சி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது,” என்று சுலியானா முஹமட் தெரிவித்தார்.

