லண்டன்: இளம் கறுப்பின ஆடவர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக லண்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவானது.
இதற்கு எதிர்ப்பு காட்டும் வகையில் லண்டன் காவல்துறை அதிகாரிகள் சிலர் துப்பாக்கி ஏந்தாமல் பணியில் ஈடுபட்டனர்.
வழக்கத்துக்கு மாறான இந்த எதிர்ப்பு குறித்து பிரிட்டிஷ் உள்துறை அமைச்சர் சுவேல்லா பிரேவர்மேன் கருத்து தெரிவித்துள்ளார்.
“துப்பாக்கியைப் பயன்படுத்துவது குறித்து காவல்துறை அதிகாரிகள் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிவெடுக்க வேண்டும். கடமையாற்றினால் குற்றச்சாட்டை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற பயம் அவர்களுக்கு இருக்கக்கூடாது,” என்று அவர் கூறினார்.
பிரிட்டனில் தீவிர பயிற்சி பெற்ற காவல்துறை அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபடும்போது துப்பாக்கி ஏந்துவதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, சக அதிகாரி மீது சுமத்தப்பட்டுள்ள கொலைக் குற்றச்சாட்டைக் கண்டித்து துப்பாக்கி ஏந்த அனுமதி வழங்கப்பட்டுள்ள அதிகாரிகளில் ஏறத்தாழ 100 பேர் தங்கள் துப்பாக்கிகளைத் திருப்பிக் கொடுத்துவிட்டதாக அறியப்படுகிறது.
இதன் காரணமாக அவர்கள் செய்ய இருந்த சுற்றுக்காவல் பணிகளை வேறு பிரிவுகளைச் சேர்ந்த காவல் அதிகாரிகள் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2022ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 24 வயது கிறிஸ் கபாவின் மரணத்துக்குக் காரணமாக இருந்ததாக லண்டன் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது கொலைக் குற்றச்சாட்டு பதிவானது.
தெற்கு லண்டனின் திரு கபா ஓட்டிச் சென்ற வாகனத்துக்குள் துப்பாக்கித் தோட்டா பாய்ந்தது. காயம் அடைந்த திரு கபா சில மணி நேரம் கழித்து மாண்டார்.
இதைக் கண்டித்து லண்டன் காவல்துறைத் தலைமையகத்துக்கு வெளியே பலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திரு கபாவின் மரணத்துக்குக் காரணமானவர் என்று நம்பப்படும் அதிகாரிக்கு எதிராகக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதை அவரது குடும்பத்தினர் வரவேற்றனர்.
பணியில் இருந்தபோது தவறு இழைத்த குற்றச்சாட்டை எதிர்நோக்கிய பிரிட்டனின் காவல்துறையைச் சேர்ந்த ஏறத்தாழ 1,000 அதிகாரிகள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் அல்லது கட்டுப்படுத்தப்பட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.