கேமரன் மலையில் நடைப்பயணம் சென்ற இந்தியச் சுற்றுப்பயணியைக் காணவில்லை

கேமரன் மலையில் நடைப்பயணம் சென்ற இந்தியச் சுற்றுப்பயணியைக் காணவில்லை

1 mins read
269fe791-efdf-41cc-8ea1-2c16e0769d47
செப்டம்பர் 22ஆம் தேதி மலையேற்றத்தின்போது காணாமற்போன சுற்றுப்பயணியைத் தேடி மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. - படம்: தீயணைப்பு, மீட்புத் துறை
Google News Preferred Icon

ஈப்போ: கேமரன் மலைப் பகுதியின் குனுங் ஜசாரில் நடைப்பயணம் சென்றதாக நம்பப்படும் 44 வயது இந்தியச் சுற்றுப்பயணியை செப்டம்பர் 22 முதல் காணவில்லை என்று கேமரன் மலைப் பகுதியின் மாவட்டக் காவல்துறை தலைவர் டிஎஸ்பி அஸ்ரி ரம்லி தெரிவித்தார்.

நந்தன் சுரே‌‌ஷ் நட்கர்னி என்ற அந்த ஆடவர், செப்டம்பர் 19ஆம் தேதி தானா ரத்தாவின் ஹைக்கர்ஸ் ஸ்லீப் போர்ட் தங்குவிடுதியில் அறையெடுத்துத் தங்கினார். அவர் செப்டம்பர் 24ஆம் தேதி கிளம்பி இருக்கவேண்டும்.

ஆனால், அவரைக் காணவில்லை என்று தங்குவிடுதியின் மேலாளர் செப்டம்பர் 25ஆம் தேதி காவல்துறையில் புகார் செய்தார்.

ஆடவர் செப்டம்பர் 22ஆம் தேதி காலை 9 மணிக்குத் தனியாக வெளியே சென்றதாகவும், அதன்பின்னர் திரும்பி வரவில்லை என்றும் தங்குவிடுதியின் கண்காணிப்பு கேமராக்கள் காட்டுகின்றன.

தானா ரத்தா சுற்றுவட்டாரத்திலிருந்த கேமராக்களின் பதிவுகளை ஆராய்ந்ததில், அவர் குனுங் ஜசாரின் பத்தாம் பாதையில் நடைப்பயணம் சென்றிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

அவரைத் தேடிக் கண்டுபிடித்து மீட்கும் முயற்சியில் பல்வேறு அமைப்புகள் ஈடுபட்டிருப்பதாக டிஎஸ்பி ரம்லி தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்