குவெட்டா: நபிகள் பிறந்தநாளை முன்னிட்டு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமயக் கூட்டத்தில் நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் குறைந்தது 52 பேர் கொல்லப்பட்டதோடு, 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. பாகிஸ்தானின் மேற்கு வட்டாரங்களில் போராளிகள் தாக்குதல்கள் நடத்தி வருகையில், இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
“தற்கொலையாளி காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் வாகனத்திற்கு அருகே குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்,” என்று காவல்துறையின் துணைத் தலைமைக் கண்காணிப்பாளர் முனீர் அகமது ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
நபிகள் பிறந்தநாளை முன்னிட்டு மக்கள் கூட்டமாகத் திரண்டிருந்த பள்ளிவாசலுக்கு அருகே சம்பவம் நிகழ்ந்தது என்றும் வெள்ளிக்கிழமை பொது விடுமுறை நாள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தாக்குதலைத் தாங்கள் நடத்தவில்லை என்று தெஹ்ரிக்-இ-தலிபான் அமைப்பு கூறியது.
குண்டுவெடிப்பில் காயமடைந்தோருக்கு அருகிலுள்ள மஸ்துங் நகர மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இத்தாக்குதல் ‘மிகவும் கொடிய செயல்’ என்று கூறி, உள்துறை அமைச்சர் சர்ஃபிராஸ் பக்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜூலை மாதம், வடமேற்கிலுள்ள கைபர் பக்துன்குவா மாவட்டத்தில், சமயச் சார்புள்ள அரசியல் கட்சியின் ஒன்றுகூடலில் தற்கொலைக் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.