மணிலா: ‘எல் நினோ’ என்னும் வறண்ட வானிலை காரணமாக அரிசி சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 306 மில்லியன் வெள்ளி நிதி உதவி வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது பிலிப்பீன்ஸ் அரசாங்கம்.
அதிகரித்து வரும் செலவுகளை விவசாயிகள் சமாளிக்க அந்த நிதி உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இரண்டு ஹெக்டேர் நிலத்திற்கு கீழ் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 120 வெள்ளி வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் ஃபெர்டினாண்ட் மார்க்கோசின் அலுவலகம் தெரிவித்தது.
2022ஆம் ஆண்டு அரிசி இறக்குமதிக்கு வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிகளில் இருந்து உதவித்தொகை கொடுக்கப்படுகிறது.
இந்த உதவித்தொகை போக கூடுதலாக கிட்டத்தட்ட 17 மில்லியன் வெள்ளியை ரொக்கச் சலுகை திட்டத்தின் மூலம் 78,000 விவசாயிகளுக்கு கொடுக்கவுள்ளதாகவும் பிலிப்பீன்ஸ் அதிபர் அலுவலகம் தெரிவித்தது.
இந்த உதவித்தொகையும் அரிசி இறக்குமதிக்காக வசூலிக்கப்பட்ட கூடுதல் வரிகளில் இருந்து எடுக்கப்பட்ட தொகை ஆகும்.
பிலிப்பீன்சில் ஆகஸ்ட் மாதம் பணவீக்கம் காரணமாக அரிசியின் விலை அதிகரித்தது. அதனால், அதிபர் மார்க்கோஸ் அரிசி, தானியங்களுக்கு விலைக் கட்டுப்பாட்டை நிர்ணயித்தார்.
அதனால் பாதிக்கப்படும் சிறு வியாபாரிகளுக்கும் கடைகளுக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
தென்கிழக்கு ஆசியாவில் அரிசிக்கான தேவை அதிகம் இருப்பதால் நுகர்வோர் செலவுகளில் அரிசிக்கு மட்டும் 9 விழுக்காடு ஒதுக்கப்பட்டுள்ளது.