சிட்னி: கிழக்கு ஆஸ்திரேலியா கரையோரத்தில் சனிக்கிழமை திமிங்கிலம் ஒன்று படகின் மீது மோதிய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் காயமுற்றார்.
உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில் ஆடவர் இருவர் படகிலிருந்து தூக்கி வீசப்பட்டு நீரில் விழுந்தனர்.
காலியான அந்தப் படகு வட்டமிட்டுக் கொண்டிருந்ததைக் கண்ட மற்றொரு படகில் இருந்தவர்கள், காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தனர்.
அருகிலுள்ள நீர்ப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 53 வயது ஆடவர் ஒருவருக்கு மருத்துவ உதவியாளர்கள் சிகிச்சை அளித்தனர். பின்னர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவரின் உடல்நிலை சீராக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்படகில் சென்ற 61 வயது ஆடவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
படகின் மீது திமிங்கிலம் மோதிய விபத்தை ‘துயரச் சம்பவம்’ என்று காவல்துறை வர்ணித்தது.
நியூ சவுத் வேல்ஸ் கரையோரப் பகுதிகளில் ஒவ்வோர் ஆண்டும் பலவகை திமிங்கிலங்கள் காணப்படுகின்றன. குளிர்காலத்தில் வடக்கே செல்லும் அவை, செப்டம்பர் முதல் நவம்பர் வரை தெற்கே திரும்புகின்றன.
இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, மேற்கு ஆஸ்திரேலியாவில் படகு ஒன்று 4 மீட்டர் நீளமுடைய திமிங்கிலத்தின் தலையின் மீது மோதியது.