லண்டன்: உக்ரேனின் உள்நாட்டுப் பகுதியில் ராணுவத்தினருக்குப் பயிற்சி வழங்க பிரிட்டன் முன்வந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
உக்ரேனிய ஆயுதப் படையினருக்கு பிரிட்டன் அல்லது மேற்கத்திய நாடுகளில் பயிற்சி வழங்கும் அதேவேளை ராணுவப் பயிற்றுநர்களை உக்ரேனுக்கு பிரிட்டன் அனுப்ப இருப்பதாகவும் பிரிட்டிஷ் தற்காப்பு அமைச்சர் கிராண்ட் ஷாப்ஸ் நாளிதழ் நேர்காணல் ஒன்றில் கூறினார்.
ரஷ்யாவுடனான நேரடி மோதலைத் தவிர்க்கும் நோக்கில் உக்ரேனில் தங்களது ராணுவப் படைகளின் முகாமை பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் தவிர்த்து வருகின்றன.
கடந்த ஆண்டில் கிட்டத்தட்ட 20,000 உக்ரேனியர்களுக்கு பிரிட்டன் ஐந்து வார ராணுவப் பயிற்சி வகுப்புகளை நடத்தியது.
இதேபோன்ற எண்ணிக்கையில் இனியும் பயிற்சி வழங்க பிரிட்டன் எண்ணுகிறது.
இது தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை பிரிட்டிஷ் ராணுவத் தளபதிகளிடம் திரு ஷாப்ஸ் ஆலோசனை நடத்தினார்.
அது குறித்து ‘சண்டே டெலிகிராப்’ செய்தித்தாளிடம் கூறிய அவர், உக்ரேனின் உள்நாட்டுக்குள் ராணுவப் பயிற்சி அளிக்கும் திட்டம் உள்ளதாகக் குறிப்பிட்டார்.
முன்னாள் ரஷ்ய அதிபர் எச்சரிக்கை
இதற்கிடையே, உக்ரேனில் உள்ள அந்நாட்டு ராணுவப் படையினருக்கு பிரிட்டிஷ் பயிற்சி வழங்கினால் அது ரஷ்யாவை நேரடியாகக் குறிவைப்பதாக அர்த்தம் என்று முன்னாள் ரஷ்ய அதிபர் டிமிட்ரி மேட்வேடேவ் ஞாயிறன்று தெரிவித்தார்.
ரஷ்ய பாதுகாப்பு மன்றத்தின் துணைத் தலைவருமான திரு மேட்வேடேவ், மேற்கத்திய நாடுகள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது மூன்றாம் உலகப் போருக்கு இட்டுச் செல்லக்கூடும் என்று எச்சரித்தார்.