நகோயா: ஜப்பானின் நகோயா நகரில் மின்படிகளில் ஏறவும் இறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்நகரில் மின்படிகளைப் பயன்படுத்துவோர் அவற்றில் நின்றபடி இருக்கவேண்டும்.
இந்தத் தடை ஞாயிற்றுக்கிழமையன்று நடப்புக்கு வந்தது.
நகோயாவில் பொதுவாக மின்படிகளின் இடது புறத்தில் மக்கள் நின்றுகொண்டிருப்பதும் வலது புறத்தில் அவர்கள் ஏறுவதும் இறங்குவதும் வழக்கம். இனி தடையைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதும் அதற்கு ஏற்றவாறு அவர்களை நடந்துகொள்ள வைப்பதும் சவாலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.
விபத்துகளைத் தவிர்ப்பதற்காக இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஜப்பானில் அண்மைக் காலமாகப் பலர் மின்படிகளில் கால்தவறி மற்றவர்களை விழவைக்கும் சம்பவங்கள் அதிகம் இடம்பெற்றுள்ளதாக ஜப்பான் டுடே ஊடகம் தெரிவித்தது. மக்கள் மின்படிகளில் மேலும் கீழும் ஓடுவதால் விபத்துகள் நிகழ்ந்ததாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டது.
புதிய தடையின்படி ரயில் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் மின்படிகளில் மக்கள் அசையாமல் நிற்கவேண்டும். ஆனால், விதிமுறையை மீறுவோருக்குத் தண்டனை ஏதும் கிடையாது.