யங்கூன்: மியன்மாரில் புகழ்பெற்ற வெப்பக் காற்று பலூன் திருவிழா மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவ்வாண்டு மீண்டும் நடைபெற இருக்கிறது.
ஷேன் மாநிலத் தலைநகரான தாவுங்கியியில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த இத்திருவிழா, கொவிட்-19 கொள்ளைநோய் பரவல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.
அடுத்த மாதம் (நவம்பர்) 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை ஏழு நாள்கள் நடைபெற உள்ள திருவிழாவின்போது இரவு நேரத்தில் வண்ணமயமான 60 வெப்பக்காற்று பலூன்களும் பகலில் அதுபோன்ற ஏராளமான பலூன்களும் பறக்கவிடப்படும் என்று விழா ஏற்பாட்டாளர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு முன்னர் 2019ஆம் ஆண்டு இரவு நேரத்தில் 115 பலூன்களும் பகலில் 281 பலூன்களும் விண்ணை அலங்கரித்தன.
இந்தப் பாரம்பரிய திருவிழா காலம் காலமாகத் தொடரும் விதத்தில் இளைய தலைமுறையினரிடம் இதன் சிறப்புகளைக் கொண்டு சேர்க்க விழாக் குழு எண்ணம் கொண்டிருப்பதாக ஷேன் மாநில அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.