கியவ்: ரஷ்யாவுக்கு எதிரான தமது நாட்டின் போர்த்திறனை பலவீனப்படுத்த எந்தவொரு சக்தியாலும் இயலாது என்று உக்ரேனிய அதிபர் வெலோடிமிர் ஸெலென்ஸ்கி தெரிவித்து உள்ளார்.
உக்ரேனிய தற்காப்பாளர்கள் தின விடுமுறையை முன்னிட்டு பதிவு செய்யப்பட்ட அவரது உரை ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
உக்ரேன் வெற்றிபெறும் வரை போரைத் தொடர உறுதிபூண்டு இருப்பதாக அவர் அந்தப் பேச்சில் குறிப்பிட்டு உள்ளார்.
உக்ரேனின் நிலைத்தன்மை, பலம், துணிச்சல் இவை எதனையும் எந்தவொரு சக்தியாலும் சீர்குலைத்துவிட முடியாது என்றும் திரு ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கான நிதி உதவி அளிக்கும் மசோதாவை அமெரிக்க நாடாளுமன்றம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதைத் தொடர்ந்து திரு ஸெலென்ஸ்கியின் கருத்து வெளியாகி உள்ளது.
இதற்கிடையே, அமெரிக்கத் தற்காப்பு அமைச்சர் லாய்ட் ஆஸ்டினுடன் தொலைபேசி வழி உரையாடியபோது ராணுவ உதவிக்கான மறுஉறுதியை அவர் அளித்ததாக உக்ரேன் தற்காப்பு அமைச்சர் ரஸ்டெம் உமெரோவ் தெரிவித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், இரு நாட்டுக் கொடிகளின் படங்களையும் வெளியிட்டு அமைச்சர் ஆஸ்டின் உறுதி அளித்துள்ளார்,” என்று திரு லாய்ட் தெரிவித்துள்ளார்.
உக்ரேனுக்கான அமெரிக்க உதவி தொடரும் என்றும் போர்க்களத்தில் உக்ரேனிய வீரர்களுக்கு வலுவான ஆதரவு தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், உக்ரேனுக்கு நிதி உதவி வழங்குவதை உள்ளடக்கிய புதிய வரவுசெலவுத் திட்ட முடிவு தொடர்பாக உக்ரேனிய, அமெரிக்க வெளியுறவு அமைச்சுகள் பணியாற்றி வருவதாக உக்ரேனிய வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.