வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்களவை செவ்வாய்க்கிழமை வாக்களித்து சபாநாயகர் கெவின் மெக்கார்த்தியை வெளியேற்றிவிட்டது.
குடியரசுக் கட்சி உறுப்பினர்களுக்கு இடையே கருத்து மோதல்கள் உச்சத்தில் இருக்கின்றன. அண்மையில்தான் அரசாங்கம் முடங்காமல் நூலிழையில் தப்பித்தது.
இந்தச் சூழ்நிலையில் மக்களவை மேலும் பல பிரச்சினைகளைச் சந்திக்க வேண்டியதாயிற்று.
அமெரிக்க மக்களவை, வரலாற்றிலேயே முதன் முறையாக இப்போதுதான் அதனுடைய நாயகரை வாக்களித்து வெளியேற்றி இருக்கிறது.
216க்கு 210 என்ற வாக்கு கணக்கில் மெக்கார்த்தி பதவி இழந்தார். மக்களவையில் உள்ள 208 ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களுடன் சேர்ந்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்த எட்டுப் பேர் வாக்களித்து மெக்கார்த்திக்கு வேட்டு வைத்துவிட்டார்கள்.
இதனிடையே, மீண்டும் ஒரு முறை சபாநாயகர் பதவிக்கு முயலப்போவதில்லை என்று செய்தியாளர்களிடம் மெக்கார்த்தி கூறிவிட்டார்.
குடியரசுக் கட்சியினர் அக்டோபர் 10ஆம் தேதி கூடி அடுத்த நாயகரைப் பற்றி விவாதிக்கத் திட்டமிட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அக்டோபர் 11ஆம் தேதி புதிய சபாநாயகரைத் தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பை நடத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.